கொரோனா தொற்று நோய் காரணமாக ஒன்ராறியோ மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கான குளிர்கால விடுமுறையை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என மாகாணக் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸ் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் தொற்று நோயாளர் தொகை அதிகரித்துவரும் நிலையில் தொற்று பரவலைக் குறைக்க உதவும் ஒரு வழியாக பாடசாலை விடுமுறைக் காலத்தை அதிகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், பாடசாலைகளில் தொற்று நோய் பரவல் அளவு குறைவாக இருப்பதால் இந்தத் தேவை எழவில்லை என லெஸ் தெரிவித்தார்.
பாடசாலைகளில் நாங்கள் மேற்கொண்ட சிறப்பான பாதுகாப்பு நடைமுறைகளே அங்கு தொற்று பரவல் குறையக் காரணமாக உள்ளது.
தொடர்ந்து சிறந்த சுகாதார -பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரமாகப் பேணுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே, மாணவர்கள் அச்சமின்றிப் பாடசாலைகளுக்குச் செல்ல முடியும் என கல்வியமைச்சர் லெஸ் தெரிவித்தார்.
தற்போது மாகாணத்தில் உள்ள 670 அரச நிதியுதவி பெறும் பாடசாலைகளில் குறைந்தது ஒரு கொரோனா தொற்று நோயாளியேனும் அடையாளம் காணப்பட்டுள்ளார். மூன்று பாடசாலைகள் தொற்று நோய் காரணமாக மூடப்பட்டுள்ளன.
புதன்கிழமை ஒன்ராறியோவில் பாடசாலைகளுடன் தொடர்புடைய 109 தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோயின் முதல் அலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாகாணம் சமூக முடக்கல்களை அறிவித்ததால் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
ஒன்ராறியோவின் தொற்று நோயாளர் எண்ணிக்கை முதல் அலையை விட இப்போது அதிகமாக இருந்தாலும் மீண்டும் ஒரு சமூக முடக்கலை ஒத்த நடவடிக்கைகளை அறிவிக்க மாகாண அதிகாரிகள் தயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.